Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, August 4, 2015

பக்கத்து வீடு - சிறுகதை

சல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள். வெளியே சென்றுள்ள கணவனை நோன்பென்றும் பாராமல் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள். தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
-என்ன செய்ய… கையில ..மடியில இருந்தா.. நானும் இவங்களப் போல.. வீசி.. செலவழிச்சிருப்பேன். என்ன செய்ய.. எனக்கு வந்து வாய்ச்சது அப்படி.. இயலாமையுடன் நீண்ட பெருமூச்சு எட்டிப் பார்த்தது.
- சல்மாவுக்கு இப்போதுள்ள பாரிய பிரச்சினை… பக்கத்து வீடுதான். பக்கத்து வீட்டு சகீனா குடும்பத்தினர் நடுத்தர வர்க்கத்தை தாண்டி ஒருபடி மேலே நிற்பவர்கள் – பணம் மனம் திறந்து புழக்கத்திலிருந்தது.. பேச்சுக்கென்றாலும் பெருமை இல்லாதவர்கள்.
சல்மாவுக்கு அப்படியில்லை. எண்ணி.. எண்ணி செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை. பொருளாதாரம் கடுமையாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. சல்மாவின் கணவர் சமீர் மாத சம்பளமாக சிறிய வருமானத்தைப் பெறுபவர். இறை விசுவாசம் மிகுந்தவர். எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் – தான் உண்டு – தன் வேலையுண்டு என்று இருப்பார்.
சல்மாவின் திருமணம் அழகாகத்தான் நடைபெற்றது. மணமான புதிதில் பெற்றோரின் பொலிவு இவளிடத்தில் இருந்தது. காலப் போக்கில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி வனப்பு போய்—வறுமை வந்து ஒட்டிக் கொண்டது. அத்தோடு இயலாமை- பொறாமை – எரிச்சல் போன்ற குணங்களும் கூடிக் கொண்டே வந்தன.
இவளின் போக்கு இப்படி என்றாலும் – பக்கத்து வீட்டார்கள் இவளிடம் மிகவும் கண்ணியமாகவும் – அன்பாகவும் நடந்து கொண்டனர். நிறைய உதவிகள் –கொடுக்கல் என்று பரந்த மனதளவில் நடந்து கொண்டனர்.
அவர்கள் செய்யும் உதவிகள் இவளுக்கு ஒரு தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. ” என்னேட இயலாமையை சுட்டிக்காட்டுகின்றனரோ—” சந்தேகித்தாள்.
அவர்கள் இவளுக்கு கொடுக்கும் உயர்தர திண்பண்டங்களை ருசித்து- ருசித்து- சபித்தாள். பொறாமைப்பட்டாள். அவர்கள் வித விதமாக உடையணிந்து சென்று வருவதை கதவு இடையினால் பார்த்து பெருமூச்செறிவாள். ஒருவரது பெறுமானம் உடையிலும் – உணவுப் பண்டங்களிலும்தான் உள்ளதென்று நிர்ணயித்தாள். ஆனால் தன் வீட்டுப் பெறுமானம் அவளுக்குப் புரியவில்லை.
ரமழான் வரும்வரை காத்திருந்தாள். ரமழான் மாதத்தில் மாத்திரம் ஸதகா கொடுக்கும் பணக்காரர்களை நம்பியிருந்தாள்.
சகீனாவுக்கு நல்ல உயர்தர உணவுகளைக் கொடுத்து அசத்த வேண்டுமென்று எண்ணியிருந்தாள். ஆனால் ஏதோ…. இவளது போதாக்காலம் – கைகள் காய்ந்து போய்க் கிடந்தன.
”கணவன் சமீரிடம் கடுமையாக திட்டு வாங்கிக் கொண்டாள். விரலுக்குதக்க வீக்கம் வேண்டும்” என்றான்.
” அழகிய குணமுடையவர்களே உங்களில் சிறந்தவர்” என்று நபி (ஸல்) கூறவில்லையா---- எடுத்துரைத்தான்.
” மற்றவர்களைப் பார்த்து சும்மா சும்மா வயித்தெரிச்சல் படாம – வீட்டையும் பிள்ளைகளையும் ஒழுங்கா கவனி…” கடுகடுத்தான்.. என்றாலும் இவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
” ஒங்களுக்குத்தான் வெக்கம், மானம், சூடு – சொரண எதுவுமே இல்லையே… அவங்க தாரத… நல்லா… தின்னுறீங்க.. திருப்பிக் கொடுக்கணும் என்ற எண்ணமே--- இல்லையே— புலம்பினாள்.
யாருடி… இவ… ஒன்ற நல்லாப் புரிஞ்சிக்கோ… நமக்கு கிடைச்ச மாதிரி… பக்கத்து வீட்டு மனுஷங்கள் வேறு யாருக்கும் கிடைக்கமாட்டாங்க…. இருக்கிறத விட்டு விட்டு பறக்க நினைக்காம… யாருட மனமும் நோவாம… நடந்து கொள்ள பாரு – உபதேசித்தான்.
”எனக்கு அதெல்லாம் தெரியாது.. எப்படி சரி… எந்த வழியில சரி… அவங்களுக்கு நாமளும் கொடுத்து என்ட லெவல.. பெலன்ஸ் பண்ணனும்..”
”கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றன்.. இவ புடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு நிற்கிறா.. உன்ன மாதிரி பொம்பளைகளால்தான் பாதி கணவன்மாருங்க திசைமாறி போறாங்க… சே… ஞாயித்து கிழமை சரி … வீட்ட இருக்க.. முடியல..” கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாதவன் சேர்ட்டை மாட்டிக் கொண்டு – பள்ளியில போய் நிம்மதியாக இருக்கலாம். என்று மனம் நொந்தவாறே வெளியே சென்றான்.
பகல் இரண்டு மணிக்குப் போன சமீர் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பினான். கையில் ஏகப்பட்ட பார்சல்களைச் சுமந்த சொப்பிங் பேக்குகள்… வாயைப் பிளந்தபடி நின்றிருந்த சல்மாவிடம் பார்சல்களை ஒப்படைத்தவன் எதுவும் பேசாமல்… குளிப்பதற்காக குளியலறையை நோக்கிச் சென்றான்.
அவசர அவசரமாக அவற்றினைப் பிரித்து பார்த்தவள் இன்ப அதிர்ச்சியில் சிலையாகி போனாள். அவள் கனவு கண்ட வித விதமான உணவுப் பண்டங்கள்…. இனிப்பு வகைகள்…
சல்மாவின் மூளையில் மின்னலென ஒரு யோசனை… சட்டென ஒரு அழகான பெரிய பீங்கானை எடுத்தாள்…
அது அவளது திருமணத்துக்கு கிடைத்த ஆறு பீங்கான்களில் ஒன்று. அவசர அவசரமாக.. எல்லா உணவு வகைகளிலும் சிறிது சிறிதாக எடுத்து பீங்கான் நிறைய வைத்தவள்.. சகீனாவின் வீட்டுக்கு விரைந்தாள்.
வாசலில் ஓதிக்கொண்டிருந்த சகீனாவின் கணவர் இவளைக் கண்டு உள்ளே போய் மனைவிக்கு மெஸேஜ் கொடுக்க…. சகீனா முகம் மலர வாசலில் வந்து வரவேற்றாள்.. சல்மா முகத்தில் பெருமை பொங்க…
” பெரிசா.. ஒண்ணுமில்ல… இன்னிக்கு சன்டேதானே… எங்கட ஹஸ்பன் சொப்பிங் போனாரு… அப்படியே… பிள்ளைங்க.. விரும்பினத வாங்கிகிட்டு வந்தாரு.. அதுதான்.. உங்கள நெனவுக்கு வந்துச்சி.. இந்தாங்க… கொடுத்து விட்டு மின்னலென மறைந்தாள்.
அப்போதுதான் --- குளித்து விட்டு தலையைத் துவட்டியவாறே வந்த சமீர்…
” என்ன எல்லாம் பிரிச்சி பாத்தியா…
”ஓ பார்த்தேனே.. கல்யாணத்துக்கு பிறகு இன்னிக்குத்தான் உருப்படியான ஒரு வேல செஞ்சிருக்கீங்க….”
”நல்ல.. கத.. நான் எப்படி .. இவ்வளவு ஆயிரக்கணக்கில கொடுத்து வாங்குறது… உன்னோட கரகரப்பு தாங்க ஏலாம .. பள்ளியில போய்.. யோசனையுடன் இருந்தேனா.. அப்போ பள்ளிக்கு வந்த சகினாட ஹஸ்பன் என்ட முகத்தைப் பாத்திட்டு கொஞ்சம் இங்கேயே இருங்க என்றவர் திரும்பி வாரப்போ இதெல்லாம் கொண்டு வந்து அன்பா தந்தாரு.. பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான். இப்படி புரிந்துணர்வுள்ள பக்கத்து வீடு கிடைக்க நாம.. என்ன நல்லது பண்ணினோமோ.. யாஅல்லாஹ்.. அவன் சொல்லிக் கொண்டே போக.. சல்மா விக்கித்து வாயடைத்து கூனிக் குறுகி நின்றாள்.
- பாத்திமா நளீரா - வீரகேசரி ஞாயிறு வாரவெளியீடு - 12/July/2015

0 comments:

Post a Comment