Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 7, 2010

மகளிரும் மகளிர் தினமும் - பாத்திமா நளீரா



பெண்.. இவள் விடை இல்லாத ஒரு வினா. விடைகளை இவளிடம் தேடிக்கொண்டே இருக்கலாம். மலரின் மென்மையையும் பூகம்பத்தின் பயங்கரத் தன்மையையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பவள். பண்டைய நாகரீகம் தொடக்கம் இன்றைய விஞ்ஞான யுகம் வரை இவளொரு புரியாத புதிர்தான். ஆண்களைப் போலவே பெண்ணும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கும் எல்லாவித முன்னுரிமைகளும் விருப்பு, வெறுப்புகளும் இருக்கின்றன. சொற்திறன், செயற்திறன் மற்றும் பல ஆற்றல்களையும் கொண்டவள். ஆணோ பெண்ணோ எக்காலத்திலும் தனித்து வாழ்ந்திட முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தே பல தேவைகளும் உரிமைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்கள் சாதிக்கப் பிறந்தவர்களாகவும் பெண்கள் சாபத்துக்குரியவர்கள் போலவும் பொதுவான ஒரு மாயைத்திரை ஆண் வர்க்கத்தைப் பிடித்து ஆட்டுவிக்கிறது.
இந்த ‘ஈகோ’ தான் பல சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம், பொருள் தெரியாமல் பெண்ணடிமைத் தனத்துக்கு வித்திட்டு வெறியாட்டத்துக்குத் துணை போகிறது. அவ்வாறான நிலையில்தான் தன்னையும் இந்த உலகத்தில் வாழ்ந்து காட்டுவதற்கான முயற்சிகளை ஒரு பெண் தனித்தோ கூட்டாகவோ மேற்கொள்கிறாள். இந்த அடிப்படையில் உருவானதே மகளிர் தினமாகும்.

பெண்கள் மீது விசேடமாக, வறுமைக்குட்பட்ட பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்,பெண்கள் மீதான ஆணாதிக்கம், அவர்கள் உழைப்பில் இடம்பெற்ற சுரண்டல்கள் இவற்றுக்கு எதிராகக் கிளர்ந்த எழுச்சிப் போராட்டத்தின் வெற்றி நாளாகவே இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய மந்தம், வீழ்ச்சிகளின் போது முதலில் பறிக்கப்படுவது பெண்களின் தொழிலாளாகவும் அதே போன்று குறைக்கப்படுவதும் அவர்களின் வேதனமாகவிருந்தன.

இது மட்டுமின்றி, பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ஒவ்வொருவரும் கேலிக்குரிய பொருளாகவும் சமூகத்தில் எந்தவொரு அந்தஸ்தும் வழங்கப்படக் கூடாதென்ற ஒரு சமுகமாகவும் இவர்கள் நோக்கப்பட்டனர்.

இவற்றுக்கெல்லாம் எதிராக 1789 ஆம் ஆண்டு ஜுன் 14 ஆம் திகதி உலகப் பெண்களின் போராட்டம் சர்வதேச ரீதியாக வெடித்தது.

உழைப்புக்கேற்ற ஊதியம், ஆண் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்தல், வாக்குரிமை வழங்குதல், எட்டு மணி நேர வேலை என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தேசமான பிரான்ஸ் பெண்களின் எழுச்சி கண்டு அதிர்ந்தது. கைகளில் கிடைத்த ஆயுதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு அன்றைய ஆட்சியாளனான லூயிஸ் மன்னனின் கோட்டையை முற்றுகையிட்டு பெண்ணடிமை விடுதலைப் போராளிகளாக சினம் கொண்டெழுந்த பெண்கள் மன்னரின் இரு காவலர்களையும் கொன்று தமது வீரத்தை வெளிப்படுத்தினர்.

பெண்களின் எழுச்சி கண்டு திக்குமுக்காடிப் போன அன்றைய லூயிஸ் மன்னன் படியிறங்கி வந்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்திருந்தும் அதனை அவனால் செய்ய முடியாது போகவே அவன் முடிதுறக்க வேண்டியேற்பட்டதும் இதே பெண்கள் சமூகத்தினாலேயே.
ஐரோப்பிய நாடுகளில் தமது உரிமைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய பெண் சமூகம் ஆஸ்திரியா, டென்மார்க், Nஐர்மன் ஆகிய நாடுகளிலும் வீரம் கொண்டு சினந்தெழுந்த பெண் சிங்கங்களாக மாறின.

நடுங்கிப் போன சாம்ராஜ்யங்கள் பெண்களிடம் சரணாகதி நிலையை அடைந்து கொண்டிருந்த போது மற்றொரு பிரான்ஸ் மன்னனான லூயிஸ் ப்ளாங்க் பெண்களுக்கான அனைத்துரிமைகளையும் வழங்குவதாகக் கூறி உடனே அவற்றை அமுலுக்குக் கொண்டு வந்தான். ஓற்றுமைப்பட்ட போராட்டத்துக்காக உலகெலாம் வாழும் பெண்களுக்கு உரிமை கிடைத்த நாள்தான் அன்றைய நாள்.. அதுதான் 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி..

எது எவ்வாறிருப்பினும் பெண் சமூகத்துக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதென்று கூறினாலும் நடைமுறையில் இன்று வரையில் அவை எந்தளவில் செயற்படுத்தப்படுகின்றதென்பது கேள்விக்குறியே. நாள்தோறும் நாம் அறியக் கூடிய செய்திகளை நோக்கும் போது அவற்றில் ஒன்றிரண்டாவது பெண்களுக்கெதிரானதும் அவர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டதான செய்திகளாகவுமே இருக்கும்.

கல்வி, அரசியல், தொழிற்றுறை, பேச்சு உரிமை, விவாகம், விவாக இரத்துரிமை போன்றவற்றில் சிலதை மட்டும் நாம் ஆராயும்போது கூட அவற்றில் பெண்களுக்கான உரிமை என்பது சரிசமத்தன்மை கொண்டதா என்ற கேள்வியே தோன்றும். இந்த விடயங்களில் அவர்களின் அடிப்படை உரிமை, மனித உரிமை, ஜனநாயக ரீதியிலான உரிமைகள் என்பன சரியான அளவுக்கு நிச்சயமாக உறுதிப்படுத்தப்படவில்லையென்பதே உண்மை.

ஒரு பெண்ணின் கல்விக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமையானது முழு சமுதாயத்துக்கும் கொடுக்கப்படும் அந்தஸ்தாகும். ஆனால் இன்று பெண் கல்விக்கான உரிமை மறுப்பென்பது வீட்டிலிருந்து வெளியில் வரை காணப்படுகிறது.

மேலும், சமூக, பொருளாதார, கலாசார பின்னணிகளை வைத்துப் பெண்களை ஆழமாக நோக்குமிடத்து சில பிற்போக்கான நடைமுறைகள் பழைமையில் ஊறிப்போன சமுதாய மரபுகள் இவைகள் பெண் கல்விக்குத் தொடர்ந்தும் பெருந்தடையாகவுள்ளன.

இப்படிப்பட்ட பிற்போக்கான பின்பற்றல்களே பெண்களின் கல்விக்கு முழுக்குப் போட்டு சீக்கிரம் இளவயதில் திருமணம், குழந்தை, குடும்ப வாழ்க்கையென்று முகங் கொள்ளப்படுவதால் அவர்களின் எதிர்கால இலட்சியங்கள், நம்பிக்கைகள் சிறு வயதிலேயே சிதைந்து போகின்றன..
பெரும்பாலான நாடுகளில் சமூக அமைப்பு, கட்டுக்கோப்பு என்று கூறி பெண்களின் கல்வியை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் நிறுத்திவிட முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த விடயம் இப்போது ஏதோ ஒரு வகையில் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில் பெண் கல்விக்கான வரையறை என்பது ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது என்பதனையும் இங்கு குறிப்பிடவே வேண்டும்.
இனி பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பில் சற்று ஆராய்வது சிறந்தது.
பெரும்பாலான நாடுகளை எடுத்துக் கொண்டால் பெண்களின் அரசியல் இருப்பு என்பது ஒரு வறுமைப்பட்ட பாத்திரமாகவே உள்ளது. விசேடமாகப் பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது திருப்தியடையக் கூடியதாகவில்லை. இது சர்வதேச ரீதியாக உணரப்பட்ட ஒரு விடயம்.

இதற்கு உதாரணமாக நாம் வாழும் கிழக்காசிய நாடுகளை எடுத்துக் கொள்ளலாம். பெண் அரசியல் தலைமைத்துவம் என்பது வேறு. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது வேறானது. இதனைக் கருத்தில் கொள்வது அவசியம். பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு முற்று முழுதாகத் தடையாக இருப்பது ஆண் வர்க்கமே. பெண்களுக்குரித்தான அரசியல் பிரதிநிதித்துவம் என்பது சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அவர்கள் அரசியலில் கற்றுக் குட்டியாகவே இருப்பர்.

தொழிற்றுறை நாம் எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான பெண்கள் அரசாங்கத்துறையை விட தனியார் துறைகளிலேயே அதிக நாட்டம் காட்டுகின்றனர். இதற்கான ஒரேயொரு காரணம் அதிகரித்த சம்பளம் என்பது மட்டுமே. ஆனால் அவர்களின் உழைப்பில் சுரண்டல்களும் மேலதிக கொடுப்பனவற்ற மேலதி வேலை, பெண்களுக்கான விசேட விடுமுறைகள், சலுகைகள் போன்ற பல விடயங்களில் இங்கு சரியான நியாயம் கிடைப்பதில்லை. ஆனால் அரசதுறையைப் பொறுத்த வரையில் சம்பளம் என்பது குறைவுதான். ஆனால் பெண்களின் உரிமை என்பது அங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் மூலமே குடும்ப அமைப்பு உருவாகிறது. ஆனால் ‘றுழஅநளெ சுiபாவள’ இது பற்றி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் கேட்டுப் பார்த்தால் அடுக்கடுக்கான பல உண்மைகள் வெளிவரும்.

விவாகம் என்ற வாசல் கதவைத் திறந்தால் உள்ளே இல்லறமே எதிர்கொண்டு அழைக்கிறது. மண வாழ்க்கை என்பது ஒருவர் மனதை மற்றவர் அறிந்து வென்று செயற்படுவது. ஆண் காலால் இட்ட வேலையை பெண் தலையால் செய்து முடிப்பது அல்ல இல்லறம் என்பது. இல்லறத்தில் இணைந்துள்ள இருவரும் பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். கணவன் மேன்மைப்பட்டவனாகவும் மனைவி மூன்றாம் தரப் பிரஜையாகவும் நடாத்தப்படக் கூடாது.

தன்னையும் இவள் ஏற்று வந்த பெண்;ணாகவே நினைக்க வேண்டுமே தவிர, தன்னை நம்பி நேற்று வந்த அடிமையாக நினைக்கக் கூடாது.

பிரச்சினைகளை, சண்டை, சச்சரவுகளை மூன்றாம் நபர் முன்னாள் முழங்கி மனைவியை நான்கு நபர்களுக்கு முன்னாள் தூஷித்து அவமதிப்பது ஆண்களுக்கு ஏதோ 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கிடைத்தது போல் ஒரு பெருமை. ஆனால் தன் கன்னத்தைத் தானே அறைந்து கொள்வது அவனுக்குப் புரிவதில்லை.

இன்றைய இல்லற வாழ்க்கை என்பது சர்வாதிகார நாடுகள் போன்று போர்க்களமாகி விட்டது. புரிந்துணர்வின்மை, ஏற்றத்தாழ்வுகள், உரிமைகள் மறுக்கப்படல், மணவாழ்வில் மன உளைச்சல், சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல், அந்தரங்கமாகவும் வெளிப்படையாகவும் கேலிக்குரியவளாகவும் கீழ்த்தரமானவளாகவும் சித்திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றாள். இந்த நிலையில் மணமொத்த மணவாழ்க்கையை விரல்விட்டு நாம் எண்ணிவிடலாம்.

கல்வி, அரசியல் தொழிற்றுறை, பேச்சுரிமை, சொத்துரிமை என்று எல்லா உரிமைகளையும் ஏதோ ஒரு வழியில் வென்றெடுக்கலாம். ஆனால் விவாகம் என்ற இல்லற வண்டி சரியாக ஓடாவிட்டால் எந்தக் குழுக்களோ அமைப்புகளோ போராட்டம் நடத்த முடியாது. எழுதும் எந்தப் பேனாவினாலும் விடிவு காணமுடியாது. எழுதும் வார்த்தைகள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போவதில்லை. உரிமைகள் இருபாலாருக்கும் பொதுவானது. இல்லறம் என்றால் பிரச்சினைதானா? பெண் என்றால் போராட்டம் தானா?

இது தவிர பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் என்பது இன்று மலிந்துவிட்ட ஒரு செய்தியாகவே உள்ளது. சில சம்பவங்களை அறியும்போது மனித குலமே வெட்கிக்குனிய வேண்டி உள்ளது. வீட்டில் கூட உறவுமுறைகளுக்கப்பால் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படும் வெட்கக்கேடான செய்திகளையும் நாம் அன்றாடம் அறிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

வீட்டிலும் வெளியிலும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் இன்று பெருகிவிட்டது. பாலியல் பிரயோகத்துக்குள்ளான பெண்கள் நீதியைத் தேடிச் சென்றாலும் நீதியே அவர்களின் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போலாகிறது

இவ்வாறு பெண்களின் உரிமை மீறல்கள், அவர்களது சுதந்திர மறுப்புத் தொடர்பில் விபரித்துக் கொண்டே போகலாம்.

எது எப்படியிருப்பினும் புதிதாகச் சுதந்திரம் வேண்டுமென்றோ தமக்கு மேலும் உரிமைகள் வேண்டுமென்றோ இன்று பெண் சமூகம் போர்க் கொடி தூக்கவில்லை. அவர்களுக்குள்ள சுதந்திரத்தைப் பேணிக் காக்கவே பெண் சமூகம் விரும்புகிறது. நடைமுறையிலுள்ள எந்தச் சுதந்திரத்தையும் தட்டிக் கழிக்காமலிருந்தால் போதும்.

ஆண்கள் மேலோங்கியவர்களாகவும் பெண்கள் தாழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டு அடிமைகள் போன்று நடாத்தப்படுபவர்களாகவும் இருக்கும் வரை மகளிர் தினத்துக்கு விடிவில்லை. மகளிர் தினத்தை எழுதி அலங்கரித்து மாலை சூடுவதில் எந்த விடியலும் கண்திறந்து காவலரண் தரப்போவதில்லை.
அனைத்தும் வாய் வார்த்தைகளிலோ சொல் வடிவிலோ வெளிவருவதனை விட செயல் வடிவில் நிரூபித்துக் காட்டப்படவேண்டும்.

1 comment: