Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 7, 2010

விலைவாசி... - பாத்திமா நளீரா


விலைவாசியே
விடியலே இல்லாத - உன்
ஆட்சியில்- நீ
‘பிடில்’ வாசிக்க
மக்கள்
மடிகளோ
தீப்பற்றி எரிகிறது.

காசுகளெல்லாம்
செல்லாக் காசுகளாக
செயலிழக்க
மூவேளை உணவும்
ஓரிரு வேளையாக
முனங்கிக் கொண்டிருக்கிறது.

கந்தையானாலும்
கசக்கிக் கட்ட- நீ
கை
குலுக்க வேண்டுமே!

பொருளாதாரம்
சவக்களையுடன்
சண்டைபிடிக்க
உத்தரவிடும்- கைகளில்
அட்சயப் பாத்திரம்.

ஓளியிழந்த
வாழ்க்கைத் தாரம்
ஒப்பாரியுடன்
உடன்கட்டை ஏறுகிறது.

வர்ணிக்கக் கூடிய
அழகான
வாழ்க்கை- இப்படி
வரம்பு மீறி
தடம்புரளுகிறதே.

விலைவாசியே – உன்னால்
எங்கள்
சுவாசம் உலர்ந்த பின்
சுதந்திரம்
கிடைத்து என்ன பயன்?
ஓட்டைப் பானையில் - கூழ்
காய்ச்சிய
கதையாகி விடக்கூடாது

உன்
வேதாந்தம் போதும் - எமக்கு
வேதனம் வேண்டும்.
புரட்சி கிளம்பலாம்
ஆனால்…
வறட்சி
வரக்கூடாது.

என்ன செய்ய..?
பாவம் மக்கள்..
என்றாலும்..
இவர்களுக்கும்
அரசுக்கும்- ஒரு
நல்லிணக்கம்…
விலைவாசி- என்ற
செருப்பால்
அடித்தாலும்
செருப்புக்கு மகுடம்
சூட்டுவதென்று!

நன்றி வீரகேசரி

0 comments:

Post a Comment