Fathima Naleera. Powered by Blogger.

Monday, March 18, 2013

கால்களுக்கு நடுவில் சுவர்கள்… - பாத்திமா நளீரா

புதிய ஜாதகங்களுக்கு
சட்டம் போட்டு
புறவுரை – எழுதும்
இவர்களின்
எச்சில்களும் கற்களும்
குழுக்களிடையே
கூட்டம் போட்டு
குரைக்க..
பொறுமை – என்ற
சிறைக்குள் – நாமே
சிறைப்பட்டுக் கொண்டோம்!
======
கரைந்து கொண்டிருக்கும்
எம் சமூகத்துக்கு
கைகொடுக்க
எம்மவர்கள் இல்லை..
புகைந்து கொண்டிருக்கும்
பூர்வீகத்துக்கு
சாமரம் வீசுகிறர்கள்
=======
எமது இருப்பு
இரவல் கேட்க
முதுகின் முள்ளந்தண்டை
கையிலெடுத்தவர்கள்
கால்களுக்கு நடுவில்
சுவர்
எழுப்ப வேண்டும்
என்று
ஒரே கூச்சல்..
நாம் நீதியிடம்
போகவேயில்லை
என்றாலும்...
கைகளை நெருப்பினால்
கழுவி விட்டார்கள்.
=======
நாம்..
மானத்துடன்
படுத்துறங்கினால்
விபச்சாரம் வழக்குப்
போடுகிறது...
என்ன செய்ய..?
கொடூரமான கணக்கின்
விசித்திர விடைகள்.
========
குட்டக் குட்ட
குனிந்ததால் – எமது
தலைகளைக் காணவில்லை
கால்களுடன் விலாசத்தையும்
பிடிங்கியவர்கள் – நாம்
கனவில் கண்ட
கானல் நீருக்கும்
உரிமை கோருகிறார்கள்
========
சரிதான் என்று
சமாதானத்தைத் தேடினால்
அது..
நெருப்பு மழைக்கு
குடை பிடித்துக்
கொண்டிருக்கிறது

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 17-03-2013




1 comment: