Fathima Naleera. Powered by Blogger.

Sunday, November 10, 2013

உரிமைக்கு உருவம்

- பாத்திமா நளீரா

பொய்கள்..
பொய்த்துப் போன
பொழுதுகளில்
புழுதிகளைப் புசித்து
பூர்வீகத்தில் புகலிடம்
கேட்டவர்களுக்கு
வன்முறை
வாரிசாக்கப்பட்டது.
==================
மனிதனுக்கு
ஞானம் வர
துப்பாக்கி தூக்கில்
தொங்குமா?
இவர்களின
அகோரத் தாண்டவத்திற்கு
புற்களும்
கொலை செய்யப்படுகின்றன.
==================
நரியும் ஓநாயும்
நித்திரைக்கு
வழிகாட்ட
மனிதனின்
நாக்கு....
நிர்வாணமாக நடிக்கிறது.
==================
மனித மூளைகளின்
சாதனை!
சதைகளை
சதைகள் வெல்ல
துண்டு போட்டு
குலுக்கல் முறையில்
குண்டுகள்
பரிசாகின்றன.
==================
என்ன செய்ய..?
நிஜத்தில்
உரிமைக்கு உருவம்
கேட்டவர்களின்
கனவில்...
பாம்புகள் பல்லாக்கில்
ஊர்வலம் செல்கின்றன.
==================
கண்ணீருக்கும்
தடைவிதிக்கும்
புல்லுருவிகளின்
புகைச்சலுக்குப் பின்னால்
எழுச்சியும் புரட்சியும்
எச்சரிக்கை செய்யும்.
==================
வெறித்தனம்
வேதம் ஓதமுடியாது.
சமாதானப் புறா
தூரத்தில்தான் அழகு!
நெருங்க நினைத்தால்....
ஐ.நாவின்
ஐம்பொறிகளும் கூட
சந்நியாசம் சென்று விடும்.
==================
என்றாலும்
அதிகார வர்க்கத்தின்
கூச்சலுக்கு
கொடி பிடிக்கும்
யானைகளின் புகலிடம்
எறும்பின்
வசிப்பிடமாகத்தான்
இறுதியில் அமையுமோ..?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 10-11-2013







0 comments:

Post a Comment