Fathima Naleera. Powered by Blogger.

Sunday, October 3, 2010

பெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும் - பாத்திமா நளீரா


அழகு! இது பல விடயங்களில் வியாபித்திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிடத்து அழகின் நூற்றாண்டோ என்று எண்ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூசப்படுகின்றது.


அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவுக்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித்தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற காலம் கரைந்துவிட்டது.

தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. என்றாலும் இன்றைய (மணமுடித்த,மணம் முடிக்காத) பெண்கள் அழகான உடலமைப்பு வேண்டும். வசீகரிக்கும் முகம் வேண்டும். என்ற எண்ணத்துடன் பல உத்திகளை நாடுவதும் தரமற்ற அழகு நிலையங்களை நாடி ஓடுவதும் தரமற்ற அழகுப் பொருட்களுக்குப் பணத்தøத் திசை திருப்புவதும் சற்றுக் கவலைக்குரிய விடயமாகும்..


தகுதி, தரம் பாராமல் கவர்ச்சியான முக அமைப்புக்கும் உடலமைப்புக்கும் பணத்தையும் வீண்விரயமாக்கிப் பல பக்க விளைவுகளைக் காசு கொடுத்து வாங்குகின்றனர். பெரும்பாலான இன்றைய பெண்கள் அழகு சாதனப் பொருட்களை நம்பி தனது வயதையும் வாழ்க்கையையும் அலுவல்களையும் அடகு வைப்பது தனது இயல்பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுவதாகவே கருதலாம் உளவியல் ரீதியாக நோக்கும் இடத்து தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடாகவும் தாழ்வு மனப்பான்மை அடித்தளமாகவும் அமையும் அதேவேளை, ஆரோக்கியத்துக்கு மிக ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

உண்மையிலேயே அழகுசாதனப் பொருட்கள் அழகைக் கூட்டுகின்றனவா என்பதனை ஆராய்ந்தால் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்கள் அழகையும் வனப்பையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அத்துடன் அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதியல் பொருட்கள் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த வேதியல் பொருட்கள் ஒவ்வாமை முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு விதமான நோய்களைத் தோற்றுவிக்கின்றது. அதிகம் ஏன் பெண்மையைக் கூட வலுவிழக்கச் செய்கின்றன.

அழகு சாதனப் பெருட்களால் தலைவலி வாந்தி, ஏன் மன அழுத்தங்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாய்மை அடைந்த பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பாவிப்பது நல்லதல்ல என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் திட்டவட்ட முடிவு.

ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 812 வாரங்கள் வரையிலான தாய்மைக்காலத்தில் இனப்பெருக்கம் ஏற்படுகின்றது. அப்போது சில ஹோமோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்தக் குழந்தையின் இனப்பெருக்க உறுப்புக்கான அடித்தளத்தை அமைக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் அந்தக் கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சி“குத் தேவையான ஹோமோன் தூண்டலை தடைசெய்து விடுகின்றது. இதனால் அந்தத் தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அந்தக் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே மலட்டுத்தன்மை அடையும் வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

இதற்கு ஒரே தீர்வு கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான றிச்சர்ட் ஷார்ப். அழகு சாதனப் பொருட்கள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்று கூறுகையில், அவற்றில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனக் கலவைகள் அதிகமாகச் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார். இந்த இரசாயனம் ஒருவருக்கு புற்று நோயை ஏற்படுத்தவல்லது என்று எச்சரிக்கிறார்.

நம்முடைய சருமத்தில் (தரமற்ற, மலிவான) அழகு சாதனப் பொருட்கள் பு??சப்படுவதால்அது நம்மைப் பாதிக்காது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால, உண்மையில் அந்த அழகு சாதனப் பொருட்களில் உள்ள இராசாயனம் தோலில் ஊடுருவிச் சென்று பாதிப்பை உண்டாக்கிறது.

மலிவு விலையில் தரக்கட்டுபபாடற்ற எந்த அழகு சாதனப் பொருட்களும் மலிவாகக் கிடைகக்கிறது என்பதற்காக தரநிர்ணய நற்சான்றிதழ் இல்லாத அந்த அழகு சாதனப் பொருட்களை நாடுவதால் பாரிய பின் விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். நாம் மேலும் சில விடயங்களை இது தொடர்பில் ஆராயலாம்.

முகப்பொலிவையும் அழகினையும் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் இராசாயனம் கலந்த கிரீம் வகைகளால் அளவுக்கு மீறி இளமையையும் அழகினையும் எதிர்பார்த்து முகச்சிதவையும் முதுமைத் தன்மையையும் ஏற்படுவதை முன்கூட்டியே சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

முக வசீகரத்தின் உதட்டு அழகுக்காகத் தொடர்ந்து உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) போடும் பழக்கம் கொண்ட ஒரு பெண், தன்வாழ்நாளில் சுமார் நாலரைக் கிலோ எடை அளவுக்கு லிப்ஸ்டிக்கைத் தன்னை அறியாமலேயே உட்கொள்கிறாள் எனவும் இது மனச்சிதைவு, கருச்சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத்தன்மை இழப்பு உட்படப் பல்வேறு சிக்கல்“களை உருவாக்கக் கூடுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரிவிக்கிறார். மேலும், வாசனைத் திரவியங்களிலும் உடலில் தெளித்துக் கொள்ளும் பாடி ஸ்பிரேக்களிலும் 'பாரபீன்ஸ்' (parabens மற்றும் பாத்தலேட்ஸ் (phthalates) போன்ற அமிலங்கள் கலந்திருப்பதால் இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகுந்து ஊறு விளைவிக்கக் கூடியவை. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். கூந்தல் ஸ்பிரேயைப் பயன்படுத்துவதால் திசொரொஸின் என்ற நுரை ஈரல் நோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.

மேலும் சில பொடுகு எதிர்ப்புச் ஷாம்பு மூலம் கிட்னி, ஈரல்,வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோளாறு ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். விதவிதமான நகப் பாலிஷ் (டியூடெக்ஸ்) நகத்துக்கு அடியில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகின்றனவாம். மேலும் சில மஸ்கராவில் போதைப் பொருட்கள் கலக்கப்படுவதால் கண் எரிச்சல், கண் சிகப்பாகுதல் போன்றன ஏற்படுகின்றன.

இன்றைய இளம் பெண்களிடையே கூந்தலை நேராக்க வேண்டும் என்ற மோகம் மிகுந்து வருகின்றது. இந்த முறைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் 'பார்மால்டிஹைட்' எனப்படும் இராசாயனம் அளவுக்கு அதிகமாகவே கலந்துள்ளது. இது புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் என உலக நல்வாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

அளவுக்கு மீறி அழகை நேசிக்கும்போது உடல் எடையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக விளம்பரங்கள் மிகைப்படுத்தும் "டயட்' முறைகளைப் பின்பற்றுகின்றனர். உதாரணமாக அமெரிக்கர்கள் ஆண்டுக்குச் சுமார் 35 மில்லியன் டாலர்களை இத்தகைய எடை குறைப்பு (ஸ்லிம்) பொருட்களுக்குச் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். இத்தகைய மோகம் ஏற்படும்போது உயிரிழப்பும் ஏற்படுகின்றது. சமீபத்தில் மாஸ்கோவில் 35 வயதான பெண்ணொருவர் அளவுக்கு அதிகமாக உடலை இளைக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதால் மரணமடைந்துள்ளார். இதனை ஒரு உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

அழகின் மீது அதீத மோகம் ஏற்படும்போது, விளம்பரங்கள் மிகைப்படுத்தும் அழகுக்காக இறைவன் அன்பளித்துள்ள இயற்கை உடலமைப்பை, உருவ அமைப்பை செயற்கை முறைக்கு மாற்றும்போதே பல வித பாதிப்புகளும் ஆரோக்கியக் கேடுகளும்“ ஏற்படுகின்றன. இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் உடலின் இயல்புக்கு ஊறுவிளைவிக்கக் கூடுமென்பதில் ஐயமில்லை.

"அழகு என்பது உருவம் சம்பந்தப்பட்டதல்ல. மனது சம்பந்தப்பட்டது' என்பதே சிலரின் வாதம். இதுவே உண்மையான கூற்று. மனதின் அழகே முகத்தின் பொலிவு. பெண்கள் போலி உருமாற்றங்களை நம்பி நாடி ஓடாமல் தன்னில் இருக்கும் அழகையும் ஆளுமைத் திறமையையும் நாடவேண்டும். அழகு பெண்களின் கைகளில் அல்ல.. காசுகளில்தான் தங்கியுள்ளது என்ற நிலை மாறவேண்டும். பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டிராமல் மக்கள் நலனுக்காகவும் சேவை மனப்பான்மையுடனும் ஆத்மதிருப்தியுடனும் தரமான நற்சான்றிதழ்களுடன் எத்தனை அழகு நிலையங்கள் வலம் வருகின்றன. விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்திழுக்கும் அழகு சாதனப் பொருட்கள் எத்தனை சதவீதமானவை ஆரோக்கியமானதாக உண்மை அழகினைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்பது கேள்விக்குறி. இரசாயனப் பொருட்களின் கலப்பற்ற இயற்கைப் பழம் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் பேஷியல், கிரீம் வகைகள் அழகுப் பொருட்கள் பரீட்சிக்கப்பட்ட தரநிர்ணய அங்கீகாரத்துடன் பாவிப்பதால் பாதிப்புகள் ஏற்படாதென்பது பொதுவான கருத்து. இளமையும் அழகும் வேண்டும் என்பதற்காக அதே இளமையில் முதுமையையும் காலப் போக்கில் முக விகாரத்தன்மையையும் வாங்கிக் கொள்ளும் இந்த நிலைமை இன்றைய நவீன யுகத்தில் மாறவேண்டும். மாறுமா?

சிதைந்த உருவத்தை சீர்படுத்தலாம். ஆனால், சீரான உருவமைப்பு சீர் கெடாமல் பாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 03-10-2010

0 comments:

Post a Comment