Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, March 23, 2010

தேர்தல் களத்தில்…- பாத்திமா நளீரா


மும்மொழிகளுக்கும்
முத்தம் கொடுத்து
முதலைக் கண்ணீருடன்
மானிட நேயத்துக்கான
தேர்தல் களத்தில்
இவர்கள்…


திசைகளுக்குத்
தீயை வைத்தவர்கள்
இருப்புக்காக
இன,மதம் என்று
இதோபதேசம்
செய்கிறார்கள்.


பதவிப் போதை
எப்படியெல்லாம்
‘குட்டு’க்களை
குட்டிக்கரணம்
அடிக்க வைக்கிறது.


மரணித்துப் போன
வார்த்தைகளெல்லாம்
மணக்கோலம்
பூண்டு
மேடைப் பல்லாக்கில்
பவனி வருகின்றன...


குரங்கிலிருந்து
பிறந்த மாதிரியே
எல்லாப் பக்கங்களிலும்
தாவித் தாவி
கதிரையுடன்
மல்லுக் கட்டும்- இவர்கள்
வாக்குறுதியில்
யாசகனுக்குக் கூட
குண்டு துளைக்காத
சட்டையைக்
கொடுத்தாலும் கொடுப்பார்கள்.


வரப்பிரசாதமாக
ஒளிரும் எல்லாப்
பிரசாரங்களுமே
ஒத்திகைகளுடன்
ஓடிவிடும்…
சிகரத்திலிருந்து
பார்த்தால் - எல்லாம்
சில்லறைகள்தான்.


பாதகங்களுக்குப்
பாதையமைத்தவர்கள்
போதனைகளைப்
போர்த்திக்
கொள்கிறார்கள்.
சமத்துவத்துக்கு
சவக்குழி
தோண்டிய - இவர்களின்
வா(நா)க்குகளும்
தேர்தல் களத்தில்
வரலாறு படைக்கும்.


அரசியல்வாதிகளின்
வேதாந்தம்- எல்லாம்
விலாசமில்லாத
விலைமகள் போலத்தான்…


நன்றி: ஞாயிறு வீரகேசரி 24-01-2010

0 comments:

Post a Comment