Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 21, 2010

திருமணம்... - பாத்திமா நளீரா


ஒன்றை
வாங்குவதற்கு இன்னுமொன்றை
விற்கிறார்கள்…
அணங்குகள் கரை சேர
அவலங்கள் நடுக்கடலில்..

சிகப்பான

சித்திரங்கள்
மணமேடையில்….
கறுப்பான
அப்பாவிகள்
அடுப்பங்கரையில்…


ஏழ்மையான
வண்ணங்களின்
வயதுகள்வரம்பு மீற-
இந்தமுதிர்
கன்னிகளுக்கு
சில வேளைகளில்
வயோதிபர்கள் கூட
வாழ்க்கையை
யாசகமாகப் போடுகிறார்கள்.

சதைகளுடன்
சந்தோஷங்கள்
சங்கமிக்க…
சன்மானங்கள்
சத்தியப் பிரமாணம்
செய்கின்றன.
வரதட்சணையின்
வரட்சியால்
மனையறம்
மலடு தட்டுகிறது.

மணமகன் தேவை
விளம்பரத்தில்
விழிகளைத் தொலைத்தவர்கள்
உணர்வுகளை
சலவை செய்து விட்டு
எரி நட்சத்திரங்களாய்-ஒரு
மூலையில்
முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஏந்திழையாளின்
பெண் பருவங்கள்
எரிந்து போக-
இல்லாத
இல்லறத்தின்
ரணங்களுக்கு
துறவறம்
ஒத்தடம் கொடுக்கிறது.
காற்றாடியான வாழ்க்கை
அந்தரத்தில்
அடைக்கலமாகிறது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 21-03-2010

0 comments:

Post a Comment