Fathima Naleera. Powered by Blogger.

Sunday, June 17, 2012

மாணவ சமுதாயமும் டியூசன் வகுப்புகளும் - - பாத்திமா நளீரா



பாடசாலைக் கல்வி என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளையின் மீதும் அத்தியாவசியமாக்கப்பட்டதாகும். சிறு பராயம் தொடக்கம் டீன் ஏஜ் முடியும் வரை (கிட்டத்தட்ட)  தொடரும் கல்வி வட்ட அமைப்பே பாடசாலைக் கல்வியாகும். ஒவ்வொரு பிள்ளையின் மீதும் கல்வி என்ற அடித்தளம் சரியான முறையில் இடப்பட்டால் எதிர்காலக் கட்டடங்கள் அழகான முறையில் மேலோங்கி கம்பீரமாகக் காட்சியளிக்கும்.


இதேவேளை, இன்றைய காலகட்டத்தை எடுத்து நோக்கினால் கல்வியின் முன்னேற்றம், நேரத்தை மிஞ்சும் பாடத்திட்டங்கள், (மாற்றங்கள்) கனணி தொழில்நுட்ப ஆதிக்கம், பாடங்களில் அதிகளவு சுமை, அழுத்தம் காரணமாகவும் பாடசாலையின் சில குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் டியூசன் வகுப்புகள் முன்னணி வகிக்கின்றன.


பாடசாலைக் கல்வியில் ஏற்படும் சில தளம்பல் நிலை, பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகள் போன்றவற்றில் ஆசிரியர்களின் பற்றாக்குறை, பாடத் திட்டத்தில் சில ஆசிரியர்களின் ஆர்வமற்ற,ஆளுமையற்ற மந்தகதி, வகுப்பு நேரத்தில் ஒழுங்காக சமுகமளிக்காமை, ஆசிரியர்களின் பாடவிளக்க உரையில் போதிய தெளிவின்மை, தொய்வுத் தன்மை,  மாணவர்களுக்குப் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத மயக்க நிலை, சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாணவ குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கல்வியில் பின்தங்கிய மாணவர்களை மட்டம் தட்டுவதால் பாடசாலைக் கல்வியில் ஆர்வம் குறைவது மற்றும் நேரத்தைச் சுருக்குவதற்காகவும் கவனத்தைத் திசை திருப்பும் முகமாகவும் சில ஆசிரியர்கள் அரட்டை,  தொலைக்காட்சி, நாடகம், கலந்துரையாடல், விமர்சனம் என்று மணித்தியாலங்களை வீண்விரயம் செய்து விட்டு இறுதியாண்டு பரீட்சைக்குப் பாடத்திட்டத்தை நிவரத்தி செய்ய முடியாமல் சாக்குப் போக்குச் சொல்வது போன்ற பல காரணங்களால் டியூசன் வகுப்புகள் மேலோங்கி நிற்கின்றன. முக்கியமாக, சில ஆசிரியர்கள் பாடசாலைகளில் ஏனோ தானே என்று கற்பித்து விட்டு பிரைவட் ஆக டியூசன் கல்வியை பார்ட் டைம் பிஸ்னஸ் (PART TIME BUSINESS) ஆக வைத்துக் கொள்கிறார்கள்.

மேலதிகமாகப் படிப்பது, அதிகூடிய கவனம் செலுத்தித் தெளிவைப் பெறுவது, நல்ல மார்க் வாங்குவது, திறமைச் சித்தி பெறுவது எல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால், பாடசாலைக் கல்வியில் முழுத் திருப்தியில்லை என்ற காரணத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இளம் மாணவர் பட்டாளம் டியூசன், டியூட்டரி என்று நாடுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

பாடசாலையில் சிற்சிறு குற்றம், குறைகள் இருப்பின் பெற்றோர்கள் நேரடியாகவே அதிபர், வகுப்பாசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடலாம். நேரத்தை ஒதுக்கி மீட்டிங் வைக்கலாம். பிள்ளைகள்  மற்றும் கல்வி குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால், சில பெற்றோர்கள் பாடசாலைப் பக்கமே தலை வைத்துப் படுப்பதும் இல்லை. தமது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்கின்றன என்ற கடமை உணர்வு மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்கும்.

இன்றுள்ள இளம் மாணவ சமுதாயம் பாடசாலைக்குச் சென்றாலும் டியூசன் வகுப்புகளுக்குச் செல்வதில்தான் நாட்டம் கொள்கின்றனர். பாடசாலையை விட இங்கு கட்டுப்பாடுகளற்ற ஒரு சுதந்திரத் தன்மை கைகொடுக்கிறது. சிலர் டியூசன் செல்வது டைம் பாஸ் (TIME PASS) செய்வதற்காகத்தான். இங்கே பெற்றோர்களின் உழைப்பு, பணம், எதிர்பார்ப்பு, கனவு எல்லாம் பெரும்பாலும் வீண் விரையமாகின்றன. தமது பிள்ளைகள் படித்து நன்றாக வரவேண்டும் என்ற நோக்கம் பெற்றோர்களிடத்தில் இருந்தாலும் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் வழிமுறைகள் சரியானதா என்ற தெளிவு குறைவானதாகவே உள்ளது.

இளம் மாணவர் சமுதாயம் இன்று டியூசன், டியூசன் என்று சென்று கொண்டிருக்கிறார்கள். எங்கே செல்கிறார்கள்? தரமான ஆசிரியர்களிடம் கல்வி பெறுகின்றனரா? தனிமை, பஸ், பயணம் இவைகள் எத்தகைய பாதுகாப்பைத் தருகின்றன? சரியான நேரத்துக்கு டியூட்டரிகளுக்குச் செல்கிறார்களா? வகுப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு ஒழுங்காக வந்து சேர்கிறார்களா? இவர்களின் நண்பர் பட்டாளம் எப்படிப்பட்டது? டியூசன் நிலையம்  அமைந்துள்ள சுற்றாடல் எப்படிப்பட்டது? தனித்துச் செல்லும் பிள்ளைகள் யார், யாருடன் நட்பு வைத்துள்ளனர்? (போதாக் குறைக்கு கையடக்கத் தொலைபேசி வேறு) இதன் மூலம் எத்தகைய விடயங்கள் பரிமாறப்படுகின்றன. போன்றவை குறித்து பெற்றவர்களின் கண்காணிப்புக் குறைவாகவே உள்ளது.

பாடசாலைக்கு அனுப்புகின்றோம். டியூசன் வகுப்புகளில் சேர்த்துள்ளோம். மாதம் இவ்வளவு செலவாகின்றது?, என்றெல்லாம் கணக்கிட்டு மற்றவர்களுக்குச் சொல்வதில் பெற்றோருக்கு அலாதிப் பெருமை. மற்றப்படி எதனைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். அதிகம் எதற்கு தமது இளம் பெண் பிள்ளைகளின் (டீன் ஏஜ்) உடை விடயத்தில் கூட அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். அவர்கள் அணியும் உடைகள் குறித்து பட்டிமன்றமே வைக்கலாம். கண்களைப் பறிக்கும் விதத்திலும் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் சினிமா மற்றும் பெஷன் ஷோக்களில் வருவதனைப் போன்று உடையலங்காரங்களை மாற்ற முற்றபட்டால் தலைவிதி கூட மாறிவிடும். மாணவர் சமுதாயம் தமது இருப்பைத் உரிய வகையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நல்லதை ஏவி, தீமைகளைத் தடுக்கும் ஒரு சக்தியாக இருக்க வேண்டுமே தவிர, சேறும் சகதியும் என்ற நிலைக்கு ஆளாகி விடக்கூடாது.

டியூசன் வகுப்புகள் என்று சொல்லிக் கொண்டு பல இடங்களிலும் பொழுது போக்கு மையங்களிலும் சுற்றித் திரிந்து கூடாத ஆண், பெண் சகவாசத்தால் மோசமான பழக்க, வழக்கங்களுக்கு அடிமைப்படுவதால் பல தீய, பாவமான காரியங்கள் திரைமறைவில் அரங்கேற்றப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் ஊடகங்கள் மூலமும் அம்பலப்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு, ஒழுக்க விழுமியங்கள் மிக வேகமாகச் சரிந்து கொண்டு வருகின்றன. முகத்தில் இரு கண்கள் எப்படியோ கல்வியும் ஒழுக்கமும் அப்படியே... இதேவேளை, பல நவீனத்துவங்களின் வரவுகளால் கல்வி மேலான ஈடுபாடு குறைந்து கொண்டு வருகிறது. ஓர் அறிஞரின் கூற்றுப்படி, ”வானத்தில் பறக்கும் பறவைக்கு இரு சிறககுகளின் அவசியம் எப்படியோ அப்படியே அறிவும் ஒழுக்கமும்” மாணவ சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றன.

இளம் மாணவ சமுதாயத்தின் நெறி பிறழ்வுக்குப் பெற்றவர்களின் பாராமுகமும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. பிள்ளைகள் போகும் இடம், சேரும் கூட்டம், நட்புப் பாராட்டும் முகம், உபயோகிக்கும் உடைமைகள், மறைமுகமான இரகசியப் பேச்சுவார்த்தைகள் போன்ற விடயங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் மாணவ சமுதாயத்தைச் சீரழிப்பதற்காகவே ஒரு கும்பல் காத்துக் கொண்டிருக்கிறது. தடுக்கி விழுந்தாலும் குழி தோண்டி மூடிவிடும் ஒரு மோசமான சூழ்நிலைகள் கொண்ட  காலம் இது. டீன் ஏஜில் சுழலும் மாணவ சமுதாயம் எதனையும் சந்திப்பதற்கும் சாதிக்கவும் துடித்தாலும் சறுக்கி விழும் அபாயம் புறச் கூழலில் அதிகம் காணப்படுகிறது.

இளம் மாணவ சமுதாயம் மற்றவர்களுக்கு ஏணியாகவும் தோணியாகவுமே இருக்க வேண்டும். இதனை விடுத்து, துடுப்பில்லாத படகினைப் போன்றோ, கலங்கரை விளக்கம் எதுவென்று தேடிக் கொண்டிருப்பவர்களாக இருந்துவிடக் கூடாது.

கல்வி கற்பது பொழுது  போக்குக்கு அல்ல.. டியூசன் வகுப்புகள் டைம் பாஸ் செய்வதற்காக அல்ல..படிப்பு, கடமை, எதிர்காலம், எதுவென்று சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். கவனமான முறையில் அடுத்த முன்னேற்றத்தை நோக்கியதாக்க் காலடியை எடுத்து வைக்க வேண்டும். டியூசன் சென்றாலும் செல்லாவிட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கல்வி என்ற கயிறை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். பெற்றவர்களின், ஆசிரியர்களின் கடும் உழைப்பு, வியர்வை, முயற்சி, எதிர்பார்ப்புகள் அங்கே ஆத்மாத்தமான ரீதியில் ஏங்கிக் கொண்டிருக்கினறன என்பதனை இளம் மாணவ மணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


நன்றி வீரகேசரி வாரவெளியீடு 17-06-2012

0 comments:

Post a Comment