Fathima Naleera. Powered by Blogger.

Thursday, June 28, 2012

சொந்த வீட்டின் சோற்றுக் கைதிகள்! -பாத்திமா நளீரா



இவர்கள்
பூரணத்துவம்
பெற்றவர்களாக
இன்னுமொரு – பூமியை
படைக்கிறாரகள்.
நாங்களோ..
சுதந்திர நாட்டின்
அடிமை வாரிசுகளாக
அபராதம்
கட்டிக் கொண்டிருக்கிறோம்..

      ***
வழுக்கி விழும்
வழிகாட்டிகள் இவர்கள்..
‘நெறி’களைத் தின்று
“வெறி’களை
எங்கள் மீது
துப்புவார்கள்..

  ***
இந்த..
தேசபக்தர்கள் எல்லாம்
நீதி தேவதையை
நிர்வாணமாக்கலாம்
ஆனால் – நாங்கள்
மூச்சுவிட்டால்
முன்னூறு
நீதிமன்றங்கள்
எழுந்து நிற்கும்.
     ***
புறாக்களின் தோல்களை
போர்த்தியுள்ள – இவர்கள்
ஹிட்லர்
முசோலினியின்
ஆசனத்துக்குச்
சொந்தக்காரர்கள்..
     ***
அழுக்கை
வைத்துக் கொண்டு
அழுக்கை அகற்ற
மழைக்கு
விளம்பரம் கொடுக்கும்
இவர்கள்...
விடியலின் வெளிச்சத்துக்கு
திரை போட்டு
சுருட்டை
பற்ற வைக்க
சூரியனுக்கு
அழைப்பு விடுவர்.
     ***
அறிவுத்தனம்
இல்லாத அறிவு
முண்டத்துக்கு
சமனென்று – இந்த
கபோதிகளின்
அகராதியில்
அழிந்து போன
பக்கங்கள்...
    ***
என்ன செய்வது?
ஏகாதிபத்திய
சர்ப்பங்களுக்கு
மாலையிட்டவர்கள்
நாங்கள்.
அதனால்தான்
புற்றுக்கு
காவல் இருக்கிறோம்..
நாங்கள்
கடந்து வந்த
பாதையையும்
நடந்து போன
இரவல்
பாதங்களையும்
கடத்திக் கொண்டு
சென்றதால்
சொந்த வீட்டிலேயே
சோற்றுக்கு கைதிகளாக
இருக்கிறோம்





1 comment: