Fathima Naleera. Powered by Blogger.

Friday, October 26, 2012

ஏழை எங்களுக்கே முதலிடம்...


ஹஜ்ஜுப் பெருநாள்
சிரிக்கிறது
ஹஜ்ஜாஜிகள் கூட்டம்
செழிக்கிறது.
சந்தோஷத்தைக் கொண்டாட
காசுக்குத்தான்
‘கல்பு“ (மனம்) இல்லாமல்
காய்ந்து போயுள்ளது.
        ====
வருடந்தோறும்
ஹஜ் பட்டம்பெறும்
வசதி வர்க்கத்தினரே
சற்று நின்று…
பட்டினிக்குப்
பட்டியலிடும்

உங்கள் முஸ்லிம்
சமுதாயத்தையும்
திரும்பிப் பாருங்கள்..


          ====
படைத்தவனிடம்
பாவ மன்னிப்புக்
கேட்டுக் கொண்டே
தூக்கத்திலும்
சொத்துக்கு - காவல்
வைக்கிறீர்கள்..
         ====
நாங்களோ..
வருடம் ஒருமுறை - வீசும்
வசந்தப் பெருநாளுக்கு
முன்னால்
ஏழ்மை - என்ற
கேள்விக்குறியில்
தொங்கலாட்டம் ஆடுகிறோம்..
           ====
எங்களின்
எஜமான் வறுமைதான்..
வட்டிக் கடைக்கும்
வட்டி கொடுப்பவனுக்கும்
வண்டி
இழுத்துக் கொண்டிருக்கிறது.
என்ன செய்ய....?
படைத்தவன் சோதிக்கிறான்..
மனைவி மக்களோ..
புதிய உடைக்கும்
புரியாணி சாப்பாட்டுக்கும்
மனப்பால் குடிக்கிறார்கள்..
       ====
தொழுகையில்..
தோளோடு நின்று
ஏற்றம் காணவரும்
தனவான்களே!
ஏழையின் - வீட்டின்
வேதனம் - என்ன
வேதம் பேசுகிறது - என்று
கேட்டுப் பாருங்கள்..
    ====
ஆடம்பரத்துக்கும்
அரசியலுக்கும் - உலக
மாயைகளுக்கும்
பணத்தைப் பஞ்சாகப்
பறக்க விடுகிறீர்களே!
எரிகிறது - எங்கள்
வீட்டு அடுப்பல்ல...
வயிறு!
    ====
மறை வேதத்தை -மறந்து...
மரண வாயிலுக்கு
பணம் என்ற
காவலரண்
வைத்திருக்கிறீர்கள்..
என்றாலும்
ஏழை - எங்களுக்கே
இறைவனிடம்
முதலிடம்!
       ====
பெருநாள்
உள்ளக் குமுறல்
உட்பொருளாய்
வந்தது - என்றாலும்
“ஈத் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்“
உங்கள் சிந்தனைக்கு
சீர்சேர்க்கட்டும்!
நன்றி: நவமணி

0 comments:

Post a Comment