Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, March 9, 2010

அரசியல்வாதிகள்..பாத்திமா நளீரா


இவர்கள்
வாய் என்ன
வட்டிக்கடையா-இப்படி
குட்டி போடுகிறது?

இவர்களின்
நாற்காலி
அராஜகத்துக்கு
அரசமரக் கிளைகள் கூட
உயிர்துறந்துவிடும்.

இவர்களின்
பேச்சு,வீச்சினாலே
மனித நேயம்
மரணிக்குமிடமெல்லாம்
மரண சாசனம்
ஒப்பந்தமாகும்.

மயானத்தில் கூட
மறுபிறப்பை வேண்டி
பீனிக்ஸ் பறவையாய்
தவமிருக்கும்
இவர்களின்
வார்த்தைக் குமுறலுக்கு
எரிமலைகூட
கண்ணீர் வடிக்கும்

கலவரங்களையே
கண்களில் வைத்து
கனவுகாணும்
இவர்களுக்கு
மக்களின்
எதிர்பார்ப்புகள்,
அபிலாஷைகள,
உரிமைகள் எல்லாம்-வெறும்
மின்மினிப் பூச்சிகள்தானா?

உறக்கத்திலும்
ஊர்வலம் போகும்
இவர்கள் விடும்
மூச்சின் ஒலிகளுக்கு
கல்லறைகள் கூட
கதவடைப்புச் செய்துவிடும்.

நாங்கள் பெற்றுத் தந்த
நாற்காலியில்-அமரும்
கோட்சேக்களே-எங்களை
நடுத் தெருவில்
மகாத்மா
ஆக்கிவிடாதீர்கள்..
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 20-12-2009

0 comments:

Post a Comment