Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, August 4, 2010

தாழ்வு மனப்பான்மைக்கு ‘குட்பை’ - பாத்திமா நளீரா



நம் வாழ்க்கையின் முதல் எதிரி தாழ்வு மனப்பான்மைதான். தாழ்வு மனப்பான்மையானது சிலர் பிறக்கும் போது கூடவே ஒட்டிப் பிறந்துவிடுகிறது. இது குழந்தைப் பருவம் முதல் ஆரம்பிக்கிறது என உளவியலாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு மேலும் உரம் போடும் வகையில் சுற்றுச் சூழல் தாழ்வு மனப்பான்மைக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில் அது வேரூன்றி விருட்சமாக வளர்ந்து விடுகிறது. பிறகு இதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சுருங்கி வாழ்பவர்களும் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு வாழ்பவர்களும் அனேகமானவர்கள் நம்மத்தியில் காணப்படுகின்றனர்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையானது, ஆண்,பெண் என்ற இரு சாராரையும் விட்டு வைப்பதில்லை. என்றாலும் பெண்ணின் உடல் கோட்பாடுகளின்படி சீக்கிரம் மனச்சிக்கல்களுக்குச் சிறைப்பட்டு விடுகிறாள். சிறு வயதிலேயே இந்தத் தாழ்வு மனப்பான்மை தொற்று நோயாகத் தொற்றியிருந்தாலும் காலம் செல்ல, செல்லத்தான் அதன் வெளிப்பாடு பகிரங்கமாக இருக்கும். அன்றாட நடவடிக்கை, நடை, உடை பாவனை எல்லாவற்றிலும் தொற்றிக் கொள்ளும்
பெண்களைப் பொறுத்தமட்டில் சிலர்) தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தரத்தைக் கூட்டிக் குறைத்துக் கொள்வதிலேயே பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதற்கு வீட்டிலும் பெற்றோர்களும் மற்றவர்களும் தீனி போடுகின்றனர். எல்லாவற்றிலும் ஆண் பிள்ளைக்குத்தான் முதலிடம் பெண் பிள்ளைக்கு இரண்டாம் பட்சம் என்று தூவும் விதை என்ற விஷம்தான் தாழ்வுமனப்பான்மைக்கு வித்திடுகின்றது.

உண்மையிலேயே தாழ்வு மனப்பான்மையானது தன்னம்பிக்கைக் குறைவுக்கும் ஆரோக்கியத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. சமுதாயத்துடன் ஒன்றிப் போவதற்கும் இது பெரும் சவாலாகவும் காணப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு அழகு உள்ளது. வித்தியாசமான திறமையும் அறிவும் உள்ளது. பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றிருக்க, நாம் இவளைப்போல் சிவப்பாக இல்லையே உயரமாக இல்லையே பெரிய கல்வியறிவு இல்லையே என்ற இப்படிப்பட்ட எண்ணமே அவளது பலவிதமான திறமைகளை, நம்பிக்கைகளை அழித்துவிடுகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. அதற்கு மன உறுதி வேண்டும். மனச்சிதைவு கூடாது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. கண்ணாடியில் பார்க்கும் போது கூட நாம் இன்னும் இளமையாக, அழகாகத்தான் இருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் உருவம் அழகாகத்தானிருக்கும். எல்லாவற்றுக்கும் எண்ணங்கள்தான் காரணம்..வெளிச்சத்தைத்தான் பார்க்க வேண்டும் விளக்கைப் பார்க்கக் கூடாது. பிறருடன் ஒப்பிடுவதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.சமயத்தில் மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். தனனம்பிக்கையை அதிகமாக்கும் எல்லா விடயங்களிலும் ஈடுபாடு காட்டலாம்.

ஒரு பெண்ணானவள் பருவ வயதிலோ அதற்குப் பிறகோ தன்னம்பிக்கை தரும் நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலம் எதிர்மறை எண்ணத்திலிருந்து அப்பெண் வெளியே வந்துவிட வாய்ப்பு உண்டு அதன் பிறகு இயல்பான வாழ்க்கையே தன்னம்பிக்கையுடன் நடாத்த முடியும். இது பிழைக்கும் பட்சத்தில், தனது குடும்பம், கணவன், குழந்தை போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ இயலாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. இதனைப் போலவே வெளியில் சகஜமாகப் பேசிப் பழகச் சங்கடப்படுவார்கள். முதலில் நம்மை விட சிறிது வேறுபாடுடையவர்களை அல்லது வேறுபாடுடைய விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதனைத் தவிர்க்க வேண்டும்.

நாம் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்று யாரும் நினைக்கும் நினைப்புத்தான் இது. என்றாலும் இதனைச் சாதிக்கத்தான் சிலருக்குச் துணிவு, தைரியம் ஒளிந்து கொள்கிறது. இது நடக்குமா நடக்காதா? நம்மால் முடியுமா? இப்படி நினைத்து நினைத்தே தாழ்வு மனப்பான்மையை உறுதி செய்து கொள்கின்றனர். ஒரு விடயத்தை ஆரம்பித்து அது தோல்வியில் முடிந்தால் இனி எதுவும் நம்மால் முடியாது என்று துவண்டு விடுவதால் இந்தத் தாழ்வு மனப்பான்மையானது சிலந்தி வலையாக நம்மைச் சுற்றி வளைத்து அடுத்த எண்ணங்களை வளரவிடாமலும் புதிய விடயங்களைச் செய்யவிடாமலும் தடுத்து விடுகிறது.

உயரத்தை அடைய விரும்பினால் அடியிலிருந்துதான் தொங்க வேண்டும். இதனை விட்டு விட்டு நம்மால் எதுவும் முடியாது என்ற எண்ணமே நாளடைவில் மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்க்கும்போது வெறுப்பாகப் பொறாமையாக குரோதமாகப் பெண்ணின் மென்மையையும் பெண் அழகையும் அழித்துவிடும். அனைத்து அம்சங்களும் ஒருசேர பொருந்திய இந்தப் பெண்கள் மனம் தாழ்வுச் சிக்கலுக்குள் நசுங்கி விடக் கூடாது. நோயை விட அச்சமே அதிகம் கொள்ளும். எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக் கொள்ள வேண்டும்.

நம்மால் பெரிதும் மதிக்கத்தக்க பல தேசியத் தலைவர்களும் பல உலகத் தலைவர்களும் இந்தத் தாழ்வு மனப்பான்மையினால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள். பல தொழிலதிபர்களுக்கும் இந்த மன நிலை ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் இதை எவ்வாறு வெற்றிகொண்டு வெளியே வந்துள்ளார்களென்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களெல்லாம் தாழi;வு மனப்பான்மையை மேலும் வளரவிடாமல் தடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்கள்.

பல்வேறு அங்கக் குறைபாடுகளைக் கொண்ட பலர் அவற்றினை ஒரு சவாலாக எதிர்கொண்டு உயரிய சேவைகளை உலகுக்கு வழங்கியதனையும் வழங்கிக் கொண்டிருப்பதனையும் நாம் அறிவோம். அவர்களின் இந்தச் சேவையால் மானிட வர்க்கமே பயன்பெற்று வருகிறது. இதேபோன்று அறிவும் ஆளும் தன்மையும் மன உறுதியும் கொண்ட பல தேசிய உலகத் தலைவர்களை நாம் அறிந்து வைத்துள்ளோம் என்பது கண்கூடு.

ஆகையால், பெண் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. தாழ்வுமனப்பான்மை இல்லாத மனிதர்கள் இல்லையென்று கூறலாம் ஆனால், இந்த எதிர்மறை மனநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தும் அதிலிருந்து மீண்டும் வருவதுதான் முக்கியம். இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து தப்பிக்க மனம்விட்டுச் சகஜமாகப் பழகலாம் நகைச்சுவையாகப் பேசவும் நகைச்சுவையை ரசிப்பதற்கும் நல்ல புத்தகங்களை உள்வாங்கிக் கொள்ளவும் மற்றவர்களுக்கு உதவவும் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களை நாங்களே நேசிக்க வேண்டும் பாராட்டவேண்டும். நம்மை நாமே தட்டிக் கொடுத்தால் மற்றவர்கள் கைகொடுத்துப் பாராட்டுவார்கள்.

முட்கள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறதென்பதனை மனதில் கொள்ள வேண்டும்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு: 25-07-2010

0 comments:

Post a Comment