Fathima Naleera. Powered by Blogger.

Saturday, December 1, 2012

காஸாவின் கால்களைப் பிடிப்பார்கள்.. பாத்திமா நளீரா


மனிதனைத் தின்று
மனிதம் வாழ
அவசர கூட்டங்களும்
அவசர அறிக்கைகளும்
ஊடகங்களின்
வெளிச்சத்துக்கு...!
உயிரற்ற உடல்களுக்கு
உணவுப் பொட்டலங்கள்
வீசித்தான் என்ன பயன்?
என்றாலும்..

ஒருநாள் வரும்
தலைமைகளும்
தகவல் பறிமாற்றங்களும்
தணல்களால்
தணிக்கை செய்யப்படும்
இவர்களால்
இடிந்த போன 
இடிபாட்டில்
துயில் கொள்ளும்
பிஞ்சுகளுக்கு
காஸாவின் 
கபுரும் தெரியாது..
கறுப்பு மேகங்களும்
புரியாது!
-----------


ஒப்பந்தங்களுக்கு
ஓட்டை போட்டு 
ஒன்றுக்கு நூறு – என்று
பதிலடி கொடுக்கும் – இந்த
நாடோடிகளின்
நாசகார சக்திகள்
ஒரு நாள்
நடைபிணமாகும்.
அப்போது...
பாதைகள் இருக்கும்
ஆனால்
கால்கள் இருக்காது.
-----------


இறுதி மூச்சைக் கூட
வெடிகளால் நிரப்பும்
இந்த...
மனித ஓநாய்களின்
மந்திர வெறிக்கு
உலக சட்டங்களின்
மேலாடைகள் கூட
மேற்கத்தேய அவிழ்ப்போ..?
தாசியின் வீட்டில் 
தாய்க்கு
தரகர் வேலை
செய்வது  போலிருக்கிறது.
என்றாலும்
ஒரு நாள் வரும்.
-------------


காஸாவின் 
உதிரத்தில்
மதுக் கிண்ணத்தையும்
நெருப்பு மூட்டங்களால்
பலஸ்தீனத்தையும் – மூடும்
இவர்களின்
அட்டகாசங்கள்
அட்டூழியங்கள்
அழியும் காலம் வரும்..
அப்போது
மரங்கள் கற்களின்
பின்னால் ஓடி
மறைந்து கொள்ள - தன்
கால்களையும் தேடுவார்கள்.
இறுதியில்…
காஸாவின்
கால்களையும் பிடிப்பார்கள்..

நன்றி விடிவெள்ளி




0 comments:

Post a Comment