- பாத்திமா நளீரா
பொய்த்துப் போன
பொழுதுகளில்
புழுதிகளைப்
புசித்து
பூர்வீகத்தில் புகலிடம்
கேட்டவர்களுக்கு
வன்முறை
வாரிசாக்கப்பட்டது.
==================
மனிதனுக்கு
ஞானம் வர
துப்பாக்கி
தூக்கில்
தொங்குமா?
இவர்களின
அகோரத்
தாண்டவத்திற்கு
புற்களும்
கொலை
செய்யப்படுகின்றன.
==================
நரியும் ஓநாயும்
நித்திரைக்கு
வழிகாட்ட
மனிதனின்
நாக்கு....
நிர்வாணமாக
நடிக்கிறது.
==================
மனித மூளைகளின்
சாதனை!
சதைகளை
சதைகள் வெல்ல
துண்டு போட்டு
குலுக்கல்
முறையில்
குண்டுகள்
பரிசாகின்றன.
==================
என்ன செய்ய..?
நிஜத்தில்
உரிமைக்கு உருவம்
கேட்டவர்களின்
கனவில்...
பாம்புகள்
பல்லாக்கில்
ஊர்வலம்
செல்கின்றன.
==================
கண்ணீருக்கும்
தடைவிதிக்கும்
புல்லுருவிகளின்
புகைச்சலுக்குப்
பின்னால்
எழுச்சியும்
புரட்சியும்
எச்சரிக்கை
செய்யும்.
==================
வெறித்தனம்
வேதம்
ஓதமுடியாது.
சமாதானப் புறா
தூரத்தில்தான்
அழகு!
நெருங்க
நினைத்தால்....
ஐ.நாவின்
ஐம்பொறிகளும் கூட
சந்நியாசம்
சென்று விடும்.
==================
என்றாலும்
அதிகார
வர்க்கத்தின்
கூச்சலுக்கு
கொடி பிடிக்கும்
யானைகளின்
புகலிடம்
எறும்பின்
வசிப்பிடமாகத்தான்
இறுதியில்
அமையுமோ..?
நன்றி வீரகேசரி
வாரவெளியீடு 10-11-2013
0 comments:
Post a Comment