Fathima Naleera. Powered by Blogger.

Sunday, December 8, 2013

மனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் துயரல்ல...பாத்திமா நளீரா


உலகில் பிறப்புரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டதுதான் இந்த சர்வதேச மனித உரிமைகள் தினம் (டிசம்பர்- 10)

மனித உரிமை என்பது  இவைதான் என்ற வரையறையோ அல்லது இந்தக் கட்டமைப்புக்குள்தான் தொகுத்து நிறுத்தப்பட வேண்டுமென்ற விதிமுறையோ இல்லையெனலாம்.

ஒவ்வொருவரின் பார்வை, சிந்தனை, அடிப்படைத் தேவைக்கு ஏற்ப வேறுபட்டதாக அமைந்தாலும் மனித உரிமையின் அதிமுக்கிய கோர்வையாக நாடு, இனம், மதம், வாழ்வாதாரம், இருப்பு, போர்க்கால சூழல், அகதிகள், அகதிகள் இடம்பெயர்வு, தடுத்து வைத்தல் போன்றவை முக்கிய உரிமைக் குரல்களாக ஓங்கி ஒலிக்கின்றன.

மேலும், மனித உரிமையானது, பிறப்பு, மொழி என தொடங்கி இறப்பின் மண்வரை நிர்ணயிக்கப்படுகிறது. மனிதன் நிர்ணயிக்கும் உரிமையை அவனே இழக்கும்போது அல்லது பறிக்கப்படும்போது மனித உரிமை மீறல் ஏற்படுகிறது.

இன்று மனிதனானவன் தனது சொந்த நாட்டில் வாழும் உரிமை, தனது வசிப்பிடம், மத வழிபாட்டுரிமை, காணி, நிலம், சொத்து, உழைப்பு, பொருளாதார உரிமை, கல்வி உரிமை, பண்பாட்டு, கலாசாரத்தை நிலை நிறுத்தும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுடன் போராட வேண்டியுள்ளதுடன் அன்றாட வாழ்வின் யதார்த்தமான பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவனாகவும் இருக்கிறான். பேச்சுரிமை, கருத்துரிமை கூட தணிக்கை செய்யப்படும் ஓர் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டு பல அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்க்கையைக் கொண்டு செல்லவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மை.

எந்தவொரு நாட்டிலாவது, இனம், மதம், நிறம் வர்க்கம், மொழி என சம அந்தஸ்து பெற்று சுதந்திர தன்மையுடன் சகல இனங்களும் ஒருமித்த கருத்துடனும் புரிந்துணர்வுடனும் நல்லெண்ணம் கொண்டு வாழ்கின்றனவோ அங்கே மனித உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுடன் ஒரு சுரண்டலற்ற ஜனநாயகத்தையும் அங்கு காணலாம்.

என்றாலும் சொந்த நாட்டில் அச்சத்துடன் வாழும் துர்ப்பாக்கிய நிலைதான் பெரும்பாலான நாடுகளில் ஏறபட்டுள்ளது. வன்முறையும் ஆயுதக் கலாசாரமும் தலைவிரித்தாடுகின்றன. ஆட்கடத்தல், கொலை, பாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதை என சீரழிந்த மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பலவீனமானவர்களைப் பலம் பொருந்தியவர்கள் அடித்து, துன்புறுத்தி ஆக்கிரமிப்புச் செய்வது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.

அடிமைக் கண்கொண்டு ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் நோக்கும் போது அகதிகள் பெருக்கம் நாளுக்கு நாள் பெருக்கெடுத்த வண்ணம்தான் இருக்கும். இதுதான் வரலாற்று ஏடுகளின் சான்றுகள்.

ஓரினம் இன்னொரு இனத்தையும் ஒரு நாடு இன்னொரு நாட்டினையும் அடக்கியாள
நினைக்கக் கூடாது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பிடுங்கி நசுக்க நினைப்பது ஆதிக்க வெறி கொண்ட பலம்வாய்ந்த நாடுகள் ஏனைய அண்டைய நாடுகளில் தலையீடு செய்து வளங்களைச் சூறையாட நினைப்பதும் இனங்களின் நாடுகளின் இறைமையைப் பாதிப்படையச் செய்து விடும்.

ஒரு நாட்டினது, மனிதனினது உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கி கொடுமைக்குள்ளாக்கப்படும் போதுதான் புரட்சியும் கிளர்ச்சியும் வெடிக்கின்றன அதேவேளை, அழிவுகளும் அகதிகளின் எண்ணிக்கையும்  அதிகரிக்கின்றன.

இனம், மதம், தேசவழி, அரசியல் மற்றும் சமுதாயக் குழுக்களால் விரட்டப்பட்டவர்கள் சிலவேளை உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழவும் உரிமை மறுக்கப்படுகிறது. மனித உயிர் என்றால் என்ன என்ற கேட்கும் அளவுக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு இனத்தவர்கள் கூடி வாழும் ஒரு நாட்டில் ஏதோ ஒரு குழுவுக்கு ஆதிக்க வெறி ஏற்பட்டு விட்டாலும் விளைவுகள் பயங்கரமானதாக இருப்பதோடு மனித நேயம், மனித உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.  சில நாடுகள்  சில இனங்களை அழித்து அவற்றின் வரலாற்றையும் ஏடுகளிலிருந்து அகற்ற முயற்சிக்கின்றன என்பதும் கண்கூடு.

ஒரு சமூகத்தவரின் சமயம், கலாசாரம் மற்றும் அடிப்படை விடயங்களைச் சீண்டும் போதும் அடக்குமுறைகளைக் கொண்டும் நிர்ப்பந்திக்கும் போதும் அந்த சமூக்தவரின் அனைத்து விதமான மொத்த உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. அந்தச் சமூகத்துக்குரிய பாதுகாப்பு, சட்டம், நீதி என்று அனைத்து அடிப்படை உரிமைகளிலும் சிராய்வு, தளம்பல்கள் ஏற்படுகின்றன. மனித உரிமை என்பது வாயால் மெல்லப்படும் விடயமல்ல..ஆனால் துப்பப்படும் விடயமும் இதுவாகவே உள்ளது.

ஆகையால் ஒரு நாட்டில் எல்லா இன மக்களும் சுதந்திரத்துடனும் நம்பிக்கையுடனும் நிம்மதியாகவும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ அந்நாட்டு அரசுதான் ஒரு பக்கச்சார்பற்ற அரசாக வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஓர் இனத்துக்கான அரசாகச் செயற்பட்டால் அல்லது ஒரு சமூகத்தைச் சூறையாட நினைத்தால் அந்நாட்டின் நிலையான அபிவிருத்தியையும் சரியான வழிகாட்டலையும் எதிர்பார்க்க முடியாது.

வன்முறையைப் பின்பற்றி போதித்து தூபமிடும் நாட்டில் நெருப்பும் புகையும்தான் கைகோர்த்து நிற்கும். ஆகவே, எந்தவொரு அரசும் தீவிரவாதப் போக்குகளுக்கு இடமளிப்பதென்பது பாரிய மனித உரிமை மீறலாகும். அதேநேரம், ஒரு நாடு இன்னொரு நாட்டினைச் சுரண்ட நினைத்து உள்நாட்டுக் குழப்பம், புரட்சியென ஏற்படுத்தி மனித உரிமை மீறல்களுக்கு வழியமைத்து விட்டு மனித உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடித்து குளிர்காயவும் நினைக்கக் கூடாது.

ஒரு நாட்டிலுள்ள சமூகமோ குழுவோ புரட்சி, கிளர்ச்சி என்ற தோற்றம் பெறும் அதேவேளை, மக்கள் உயிர், அழிவுகள் என்பது அதனை விட மிகப் பயங்கரமானது என்பதனை மறந்து விடக்கூடாது.

மனித உரிமை என்பது தோளில் சுமக்கப்படும் துயரல்ல.. சுவாசிக்கும் சுதந்திரக் காற்றாக இருக்க வேண்டும். ஆகையால் மனித உரிமைகள் என்ற இத்தினத்தின் நோக்கமானது, ஒரு நாட்டில் வாழும் எந்த ஒரு சமூகம் என்றாலும் அதன் உரிமையை எந்த ஒரு சந்தர்ப்பத்திலேனும் இழக்காமல் முழுமையான சுதந்திரத்துடன் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதனையே இத்தினத்தின் கருப்பொருளாகக் கொள்வோம்.

நன்றி வீரசேரி வாரவெளியீடு 08-12-2013.




0 comments:

Post a Comment