புதிய விடியலுக்கு
பூந்தோட்டங்கள்
பூப்பறிக்கச் செல்கின்றன...
-------------
குறைகளற்ற – இந்த
குழந்தைகள்
மொழிகளுடன் கைகுலுக்கி
பேதமற்ற
குறிஞ்சிகளாய்
இதழ் விரிப்பார்கள்.
என்றாலும்...
பொங்கும்
கண்ணீரில் கண்கள்
பொய்கையாக..
பயம் – இவர்களை
பகிடிவதை பண்ணும்.
-------------
மிரண்ட பார்வை
ஓரத்தில்
அகர எழுத்துகளும்....
வெளிறிய
உதட்டின் ஓரத்தில்
கவிதைக் குஞ்சுகளும்...
ரகசியம் பேசும்.
வகுப்பறை
மணித்தியாலங்கள்
பனியாய் கரைய
மனமோ உருகி
மன்றாடும்.
-------------
இந்தப் பாலகர்களின்
கல்வியறிவில்
எத்தனை..
அப்துல் கலாம்கள்
உதயாமாவார்களோ..?
தூரிகை கிறுக்கலில்
எத்தனை
டாவீன்சிகள்
சிரிக்கப் போகிறார்களோ..?
இலட்சியங்களை சுமக்கும்
இந்த..
பாலகர் பல்கலைகழக
சாம்ராஜ்யத்தில்
எத்தனை
சித்திரங்கள் சரித்திரம்
படைக்கப் போகின்றனவோ?
இந்தப் பிஞ்சுகளே
உலகின்
அதிசிறந்த படைப்பாளிகள்!
பொற்கிழியும்
பொன்னாடையும்
இவர்களுக்கே உரித்தாகட்டும்
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-02-2014
0 comments:
Post a Comment