Fathima Naleera. Powered by Blogger.

Friday, February 13, 2015

திருமணம்

அழகிய தென்றலை 

சூறாவளி
கடத்திச் சென்றது

- பாத்திமா நளீரா

ஏமாற்றம்

துறவறம் பூண்டது

உன் பெயர்
நானோ..
மணமாகாமல்
விதவையானேன்.

- பாத்திமா நளீரா

தடுமாற்றம்

உன் 
விழி திறப்பால் 

ஊழல் செய்யும் 
மனதினை
கைதுசெய்ய
உத்தரவிட்டேன்.

- பாத்திமா நளீரா

சொந்தம்

ஐவகை (ஐந்திணை) நிலங்களையும்
சுற்றி வந்தேன்...

இறுதியில்
ஆறடி நிலத்திற்கே
வந்து சேர்ந்தேன்

- பாத்திமா நளீரா 

Sunday, January 25, 2015

மாதச் சம்பளம்

மணமான புதிதில்
புது மாப்பிள்ளையாய்
மாதச் சம்பளம்
மிடுக்குடன் வந்தது
ஆனால்.. இன்று
யாசகனைப் போல்
யாசித்து நிற்க
குடிமனை கூட
குடிப்பரம்பலைக் கண்டு
எரிச்சல் பட்டுக் கொள்ளும்
   ----------
தீவிரவாதமாக
வளர்ந்து விட்டது வறுமை
கடன்காரனைக் கண்டால்
கவருக்குள்
ஒளிந்து கொள்கிறது
சம்பளப் பணம்!
இதற்கு மட்டும் என்ன
மான, ரோஷம்?
   -----------
குடும்ப அங்கத்தவர்களில்
படிக்காத மேதைகளும்
ஏராளம்!
மனப்பால் குடிக்கும்
கவரிமான்களும்
ஏராளம்!!
பல வடிவங்களில்
மனக் கோட்டைகள்
மனதிலே பதிந்தாலும்
புதுப்பிக்கவென்று
இலட்சியத்துடன்
லட்சமும் இருக்க  வேண்டும்
    --------------
அடுத்த வேளை
உணவுக்குக்  கூட
வயிறு விண்ணப்பிக்க
கடந்து வந்த
வரலாறுகள்
அழிந்து விடுமோ?
   -------------
ஈற்றில்
இறுதிக் கிரியைக்கு கூட
மாதச் சம்பளத்தின்
எச்சில் மிஞ்சுமா..
கேள்விகுறிதான்!


-     - பாத்திமா  நளீரா
  வீரகேசரி வார வெளியீடு 25/01/2015

Friday, January 23, 2015

இளம் பருவத்தினரும் வன்முறைகளும்


இளம் பருவத்தினரிடையே வேகமாக வளர்ந்து வரும் வன்முறைகளுக்கு காரணம் சினிமாவும் தொலைக்காட்சியும்தான் என்று சமூகவியலாளர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு சிறுவனானவன் 18 வயதை எட்டும் முன்னர் கிட்டத்தட்ட 2 லட்சம் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கிறான். இளம் வயது விடைபெறும் முன்னராக ஆயிரக்கணக்கான கொடூரக் காட்சிகளைப் பார்ப்பதனால் இளமனதில் வக்கிரமும் வன்முறையும் அளவுக்கு அதிகமாகவே குடிகொள்கின்றன.
கீழ்த்தரமான, ஆபாச உணர்வுகள்  மேலோங்கி பாவமான நாசகார செயல் புரிவதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாகின்றனர்.

- தொழிலுக்குச் செல்லும் பெற்றோர்.
- பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்காதவர்கள்.
- தனிக்குடித்தனம் பண்ணுபவர்கள் வேலை வேலை என்று மூழ்கி விடுவது
- பிள்ளைகளின் நெருக்கத்தை அலட்சியப்படுத்துபவர்கள்.
- பிள்ளைகளுக்கு தேவையானதை பணத்தால்  நிறைவு செய்து கடமை முடிந்து விட்டது என்று தப்புக்கணக்கு போடுபவர்கள்.
- சமய ஒழுக்க விழுமியங்களைப் பற்றி சரியான முறையில்,சரியான நேரத்தில் எடுத்துரைக்கத் தவறுபவர்கள்.
- இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

மாணவ பருவத்தை தாண்டாத இந்தக் கட்டிளமை பருவத்தினருக்கு அடிப்படை உளவியலில் ஏதோ ஓர் அன்பு தேவைப்படுகிறது. உடலியல் மாற்றங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு சரியான நபரைத் தேடுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் பெற்றோர் ஆகிய தாங்களே சிறந்த உற்ற துணை மட்டுமல்ல.. வழிகாட்டியும் கூட என்று இவர்கள் நிரூபித்து பிள்ளைகளுடன் முடிந்தளவு அன்பாக, நெருக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பாவம், அழிவை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கும் முன், கண்ணும் கருத்துமாக இமை மூடாது கண்காணித்துக் கொள்வது முக்கியமான கடமையாகும். சாதிக்கப் பிறந்த இவர்களைப் பெற்றோர்களே படுகுழியில் தள்ளி விடக்கூடாது.

ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் நடப்பதென்ன? வீண் சண்டை, சச்சரவுகள், தேவையற்ற அரட்டைகள், பிள்ளைகளை தனியே வீட்டில் அமர்த்தி விட்டு பயணம் போய் பொழுதை கழித்தல்.

எல்லாவற்றையும் விட தொலைக்காட்சி தொடர் நாடகங்களுக்கு நேரத்தை ஒதுக்கி முக்கியத்துவம் கொடுத்து வீட்டுக்குள்ளேயே மோசமான சூழ்நிலைகளை பெற்றோர்களே ஏற்படுத்திக் கொடுத்தல்.
அண்மையில் செவிமடுத்த உரையொன்றில் தொலைக்காட்சி, வானொலி இல்லாத வீடுகளில் கல்வி பயிலும் பிள்ளைகளில் உயர்தர, சாதாரண தர பெறுபேறுகள் மிகச் சிறந்த முறையில் அமைகிறதென்றும் தொலைக்காட்சியினால் அதிகளவில் ஈர்க்கப்படும் பெற்றோர் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு  10.00 மணி வரை மெகா சீரியலுக்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிள்ளகைளுடனான தொடர்பாடலுக்கு சாவு மணி அடிப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கற்றல் என்றால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுதல். அதிகாலை 4.00 மணிமுதல் காலை 8.00  மணி வரை மிகச் சிறந்த நேரம் என்று (அல்லாஹ்வின் அருள் கிடைக்கிறது) உளவியல் நிபுணர்கள் எடுத்துக் கூறும் அதேவேளை, ஞாபகத்துக்கு சிறந்த நேரமாக மாலை 6.00 முதல் இரவு 9.00 மணிவரை கணிக்கப்படுகிறது.

காலையில் பாடசாலை, மதியத்துக்குப் பின்னர் டியுசன், சமயம், மார்க்கப் பள்ளி.. இப்படியே மாலை நேரம் அதிரடியாக வந்து விடுகிறது. பிள்ளைகள் படிக்க ஹோம் வேர்க் செய்ய அல்லது பெற்றோர் சொல்லிக் கொடுக்க பெற்றோருடன் கலந்துரையாடும் சூழ்நிலைகளை பெற்றோரே தட்டிக் கழிக்கின்றனர்.

“ நீ போய் படி“ என்று பிள்ளைகளை விரட்டி விட்டு தொலைக்காட்சி நாடகத்தில் மூழ்கி விடுகின்றனர். ஆபாசம், வன்முறை, முறையற்ற உறவுமுறை, அசிங்கங்கள் எல்லாம் வீட்டுக்கு உள்ளேயே பெற்றோரால் அரங்கேற்றப்படுகின்றன.

தனிமையில் விடப்படும் பிள்ளைகள் திருப்தியற்ற வாழ்க்கை முறையிலும் முரணான நடத்தை மாறுதலுக்கும் முகங்கொடுப்பதோடு அவர்களும் ரீ வி, சினிமா என்று ஏதோ ஒருவகை உந்துதலுக்கு தள்ளப்படுகின்றனர். ஆரம்பத்தில் திருட்டுத்தனமான தவறை செய்பவர்கள் பிறகு பகிரங்கமாக செய்ய தலைப்படுகின்றனர். பயங்கரமான வன்முறைகளப் பார்த்து, பார்த்து ரசிக்கின்றார்கள். ஆபாசங்களை திரும்ப, திரும்ப பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் செய்யும் குற்றங்களில் பெற்றோருக்கே பெரும் பங்குள்ளது. இறுதியில் வரம்புகள் அற்ற தேடல் வன்முறையில் போய் முடிகிறது.
இளம் குற்றவாளிகளில் 60 சத வீதமானோர் மனம் முறிவு ஏற்பட்ட குடும்பத்திலிருந்து உருவாகியவர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, இவர்களுக்கு என்றொரு பாதுகாப்பு அங்கே கேள்விக்குறியாக்கப்படும் போது தனித்து விடப்படும் இவர்கள் எதனையும் செய்யவே எத்தனிக்கின்றனர்.

இளமைப் பருவத்தின் உற்சாகம், உத்வேகம் சுறுசுறுப்பு, உழைப்பு இவைகள் எல்லாம் கானல் நீராகி விடுகிறது.
இந்த Stress நிறைந்த பருவத்தை பக்குவமாகவே தட்டிக் கொடுக்க வேண்டும். தன்னிச்சையான முறையில் பெற்றோர் நடந்து கொள்ளக் கூடாது. எனவே எது எப்படி என்றாலும் வீட்டுச் சூழல் இளம் குற்றவாளிகளை உருவாக்கி விடக் கூடாது.

“இளமை ஒரு இனிய செல்வம். அதனை எவ்வாறு செலவு செய்தோம் என்பது பற்றி நாளை இறைவன் விசாரிப்பான். நம்முடைய ஒவ்வொரு அசைவுக்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதனை எப்போதும் நினைவில் கொள்வோம்“ – நபிகள் (ஸல்)

- பாத்திமா நளீரா
விடிவெள்ளி - 22/01/2015

Wednesday, December 31, 2014

2014














நிஜத்தை மிதித்த
நிழல்களும்
சமத்துவத்தை எரித்த
இனவாதமும்
வாழ்க்கைகாக அழுத
பூக்களும்
மண்ணில் புதையுண்ட
சரித்திரங்களும்
பசி கரையேற
சதையுண்ட சோகங்களும்
ஆண்டின் இறுதியை
சிறைசெய்த
வெள்ள அனர்த்தமும்
இன்னும் இன்னும்
எத்தனையோ.......
என்றாலும்..சின்ன-சின்ன
சந்தோஷங்கள்
அன்பான
பரிமாறல்கள்
சினேகமான சிரிப்புகள்
என்று 2014 
அஸ்தமித்துக்கொண்டிருக்க
2015 எப்படியோ?
- பாத்திமா நளீரா

Monday, December 29, 2014

மழை














வானத்திலும் தேர்தலா..?
மேகத்தின் பிரசார
உச்சமோதலில் -- மழை

கொட்டோகொட்டு..என்று
கொட்டுகிறதே...நாங்கள்
எங்கேதான் போய்
ஒதுங்குவது..?
அகதி என்ற
"வாக்கு"டன்
வெள்ளத்தில்-- அடிபட்டு
போய்கொண்டிருக்கிறோம்.
- பாத்திமா நளீரா

Thursday, December 11, 2014

நோபலும் வீழ்ந்ததா அணுவிடம்...?














ஒரே
மார்க்கத்தில் – பல
சுவர்கள்
வேதம் ஓதும்
சாத்தான்களுக்கோ – ஏக
கொண்டாட்டம்!
நாமே...
இரத்தத்தைக் கொடுத்து
இரத்தத்தை உறிஞ்சுகிறோமா?
---------------------------
இல்லாத ஒன்றை
மார்க்கமாக்குவார்கள்
எம்மவர்களின்
பிரிவினை மூச்சில்
எத்தனை....
மூச்சுகளின் சரித்திரம்
சமாதியாகி இருக்கும்!
---------------------------
எரிந்து போகும்
ஏகத்துவமும்
அபிவிருத்தியடையும் - எம்
அகதிகளும்
புகலிடம்  இல்லாத
கண்ணீரும்
சிரிக்கும் மில்லியன்களின்
சிதறல்களா..?
---------------------------
சமாதானத்தை
தின்று கொண்டிருக்கும்
ஆயுத கலாசாரத்திடம்
இரத்தமும் சதையும்
இன்னமும்... பிச்சை
கேட்டுக் கொண்டிருக்க
வல்லரசுகளின் குலுக்கலில்
நோபலும் வீழ்ந்ததா
அணுவிடம்...?
---------------------------
இயந்திர மனிதன்
இமயம் போய்
வந்தாலும்
கைதட்டுவார்கள்..!
எம்மவர்கள் – ஒரு
குச்சியைப் பொறுக்கினாலும்
குண்டுதாரி என்பார்கள்
---------------------------
தண்ணீர் கொதித்து
சுனாமி வந்து விட்டதாக
ஏகாதிபத்தியங்கள்
எழுதி வைக்கும்
அவர்களின்
கேள்விகளில் எல்லாம்
கோளாறுகள்
கோவணம் கட்டினாலும்
அக்கரையில்
எம்மவர்கள் – ஒரு
துண்டு உடைக்கு
கனவில்
கேள்வி கேட்கின்றனர்!
---------------------------
ஆயுத வணங்கிகளுக்கு
தலைகளும் -
விடுதலைகளும்
வீழ்ந்து பணிய..
எச்சங்களையும்
எச்சில்களையும்
நாமே ”சுத்தம்”
செய்கிறோமா?
எமக்கு
இரண்டு பக்கங்களிலும்
இடிதானா?

- பாத்திமா நளீரா

Published on Vidivelli Paper On Thursday, 11th - 2014....

Sunday, November 30, 2014

மரம்












நான்
விண்ணைப்பார்த்து
வியந்துகொண்டிருக்க….

மண்ணின் அடியில்-என்
ஆயுள் வேர்களை
யாரோ…
களவாடுகிறார்களே…
யார் இவர்கள்?
இவர்கள்தான்
மனிதர்களா?
- பாத்திமா நளீரா

Saturday, November 29, 2014

நான் எரிந்தேன் - பாத்திமா நளீரா

தேடல்களுக்காக
தேசம் கடந்தேன்
தேவைகளில்
….
நிறைவும் பெற்றேன்
ஆனால்

தேடல்களின் இறுதியில்
என்னைத் தேடினேன்
   ---------
உழைத்தேன் - உழைத்தேன்
வாலிபம் பாறையானது
வயதும் வெளுத்தது
வாளைப் போன்ற
உறவுகளுக்கு - என்
உழைப்பில்
….
ரொம்பவும்தான் அக்கறை!
இரத்தத்தை வெட்ட முடியுமா
?
    ----------

Saturday, November 8, 2014

நெருப்பு ஊர்வலத்தில்.. -பாத்திமா நளீரா

வெடித்த நினைவுகளில்
கனத்த காட்சிகள்
படர….என்
கவிதைக்கு….
எல்லாம் இருந்தது
கனவைத் தவிர!
----------------------------
தீண்டத்தகாத
இதயம்
தட்டப்படாத தூசியில்
கண்ணீர் ஓவியமாக
நிலத்தை
முத்தமிட்டன.
சிந்தித்து.. சிந்தித்து
மூளையும் சிலந்தி
வலை  பின்ன
----------------------------