Fathima Naleera. Powered by Blogger.

Thursday, March 20, 2014

காவல் காக்கும் ஓநாய்கள்! -பாத்திமா நளீரா

மெல்ல..மெல்ல
விஷங்கள் விலாசமிட
நாகங்களுக்கு நடிப்பு
சொல்லிக் கொடுக்கவென
மாமனிதர்கள்
விரைய...........
-----------------------------
திரண்ட சக்திகள்
தார்மிக விழுமியங்களின்
கால்களை உடைக்கவென
தரணியில் வலம் வர.....
-----------------------------
பாரம்பரிய
சுவடுகளின் சுவாசத்தை
பறிக்கவென
துவேஷத்துடன்
சுழற்காற்று
உக்கிரமாய் வீச.........
-----------------------------
ஒலிவ் மரங்களின்
கண்ணீரில்...
கல்லறைகள் கரைவதாக
கறைபடிந்த குரல்கள்
கூப்பாடு போட..
-----------------------------
கடலில் எறியப்பட்ட
கண்களைத் தேடி – ஒரு சாரார்
காந்தியிடம்
முறையிட்டு அழ...
-----------------------------
வலியவர்களின்
வம்சாவளியை
எளியவர்களின்
எச்சில்கள்
ஆக்கரமிப்புச் செய்கிறதென
ஆர்ப்பாட்டங்கள்
ஆடைகளைக் களைய....
-----------------------------
இறந்த பிணங்களின்
ஒன்று கூடலில்
இனவெறி இரத்தத்தை
உறிஞ்சிக் கொண்டே
மீண்டும் ஒரு – புதிய
திட்டம் தீட்ட...
-----------------------------
சந்து பொந்துகளில்
எல்லாம்
சட்டமும் சத்தியப்
பிரமாணமும்
பாய்போட்டு உறங்க
ஓநாய்கள்
கரிசனையுடன்
காவல்காத்து நின்றன.
நன்றி விடிவெள்ளி 20-03-2014

0 comments:

Post a Comment